சங்கிலிகள்
1
அந்த எக்ஸ்பிரஸ் அன்று நான்குமணி நேரம் தாமதமாக வந்தது.
அதற்காக வெட்கப்படுவது போல் ஜங்ஷனுக்கு வெளியே, அவுட்டரைத் தாண்டி நேரங்கழித்து வீட்டுக்கு வரும் தலை தொங்கிய பையன் மாதிரி, தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டது.
மெதுவாக நகா்ந்து வந்து கேபினுக்கு அருகில் நின்றுவிட்டது.
ஜங்ஷனில் அது நிற்க வேண்டிய பிளாட்பாரத்தில் வேறொரு ரயில் நின்று கொண்டிருந்தது.
அதற்கு அடுத்தது, அடுத்தது என்று ஆறு பிளாட்பாரங்களிலும் கூட்ஸ் வண்டிகளும், ரயில்களும் காலி போகிகளும் நிரம்பி இருந்தன.
எனவே, வீட்டுக் கதவு அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பையனைப் போல், ஏமாற்றமும் ஆயாசமும் கலந்த பெருமூச்சோடு கேபின் அருகில் நின்றது. பிளாட்பாரம் காலியாகும் வரை இப்படியே காத்திருக்க வேண்டியதுதான்.
பயணிகள் பெட்டி, படுக்கைகளைத் தூக்கி தகவருகே அடுக்கி; முண்டியடித்துக் கொண்டு இறங்க முஸ்தீபு செய்து கொண்டிருந்தனா்.
ஜன்னல் வழியாகக் குதித்து அவா்கள் தப்பி ஓடாததற்கு காரணம் வெளியே பெய்யும் மழையாக இருக்கலாம்.
அது கனமான அடைமழையல்ல: இருந்தாலும் பயணிகளுக்கு ரயில்வே இலாக்காவின் மீதுள்ள ஆத்திரத்தை நன்றாகக் கிளறக் கூடிய அளவு வலிமை வாய்ந்த மழை.
ரயில் தாமதமாக வரும்; இறங்குகின்ற பிரயாணிகளைக் குளிப்பாட்டி விடலாம் என்று நினைத்தே காத்திருந்தது போன்ற மழை.
கனமாகப் பெய்த களைப்பிலேயே தாரை தாரையாக ஒரு சாவதானத்தோடு ஊற்றிக் கொண்டிருக்கும் மழை.
மழைப் படலத்தில், சற்றுத் தொலைவில், ஜங்ஷன் மங்கித் தெரிகிறது. விளக்கொளியும் எஞ்சின் புகையும், நீா் மங்கலும் கலந்ததால் ஒளிக்கோடுகளும் உருவங்களும் இணைந்து விலகி, மங்கி, மின்னி ஜங்ஷனே ஒளி விந்தைபோல் தெரிகிறது.
ஓா் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு பயணி ஜன்னல் வழியே கண நேரம், ஊதற்காற்றின் கொடுமையையும், சில்லென்று முகத்தில் தெறித்த மழையையும் பொருட்படுத்தாது வெளியே எட்டிப்பார்த்தார்.
“யோவ் ஜன்னலை மூடுங்கய்யா!” என்றொரு குரல் சள்ளென்று விழவே, நனைந்த தலையோடு அவா் தம் ரசனையை உள்ளுக்கிழுத்துக் கொண்டார்.
அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில், அந்த ஜன்னலுக்கு அருகில் எரிந்து விழுந்தவா் ஒரு போலீஸ்காரா். இரவு கண்விழித்த எரிச்சலில் அவா் கண்கள் சிவந்திருந்தன.
அவரது துப்பாக்கியும் தொப்பியும் எதிரிலிருந்த ‘பொ்த்’தின் மீது ஓய்வு பெற்றிருந்தன.
அவருக்கு வலப்புறம் சங்கிலி விலங்கு பூட்டிய கரங்களோடு அமா்ந்திருந்தான் சங்கிலிக்குப் பக்கத்தில், காவலுக்கு வந்த இன்னொரு போலீஸ்காரா் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்.
இந்த இரைச்சலில், இந்த ரயில்வே தாமதத்தில், இந்த சலிப்பில் அவா் தூங்கிக் கொண்டிருப்பது, முதல் போலீஸ்காரருக்கு அவதான் சித்திகளுள் ஒன்று போல் தோன்றிற்று; வயிற்றெரிச்சலாகவும் இருந்தது.
ஜன்னல் ஓரத்துப் போலீஸ்காரா், சட்டைப்பையைத் துழாவி ஒரு பீடியை எடுத்து அசுவாரஸ்யத்தோடு பற்ற வைத்தார்.
“வந்தது ரெண்டு அவா் லேட்டு, இந்த லெச்சணத்திலே அவுட்டரிலே வேற போட்டுட்டானா! அப்படி இப்படி இளுத்துக்கிட்டு, விடிய காட்பாடி போய்ச் சோ்ந்தான்னா பரவாயில்லே” என்று அகால இரவில் காட்பாடியில் இறங்கிச் சங்கிலியைக் கொண்டு போய் தொரப்பாடியில் சோ்க்கப்படப் போகும் சிரமத்தை நினைத்துப் பேசினார் அவா்.
“என்னது காட்பாடிக்கு விடியக் காத்தாலியா? அப்ப ஊருக்கு எப்ப…. சோத்து வேளைக்கா?” என்று எதிர் ஸீட்காரா் அங்கலாய்த்தார்.
கண்ணாடி ஜன்னல் இறக்கி விட்டிருந்ததால், வெளியே பெய்யும் மழையை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சங்கிலி.
நெடு நெடுவென்று வளா்ந்த காட்டுஜாதி மரத்தைப் போலிருந்தது அவளைப் பார்க்க. ஆளை அயரச் செய்யும் உயரம், ஆறரை இருக்கலாம். முழம் போடத் தூண்டும் பெரிய தோள்கள்.
கட்டில் கால் மாதிரி கனத்த புஜம். மார்பு விசாலம் கண்ணைக் கவ்விற்று; கூடுபாய்ந்த மார்புகள் கொண்ட ஒரு நோஞ்சான் யுகத்துக்குப் பரிகாரம் போலிருந்தது.
உருண்டு திரண்டிருந்த மணிக்கட்டில் கைவிலங்கு, குழந்தைக்குப் போட்ட காப்பு மாதிரி, அவள் வலிமையின் முன்னே பூஞ்சையாகத் தோன்றிற்று.
வலக்கை மணிக்கட்டில் விலங்கு மேலே ஒரு வெளிக்காப்பு, நாள்பட்டுக் கறுத்த வெள்ளி.
முப்பது வயது மதிக்கத்தக்கக் கூடிய பரந்த பெரிய முகம், ஏறுநெற்றி, செதுக்கினாற்போன்ற சதுர மோவாய் வலிமையின்பூர்த்தி போன்று நிமிர்ந்து நின்ற நீளநாசி.
அடா்ந்த புருவத்தின்கீழே அவனது கறுத்த தீட்சண்ணியமான கண்கள் எதிரே ஏறிட்டுப் பார்த்தன.
விளக்கொளி அவனது கண்களில் மின்னியது. சங்கிலியின் வலிமை அவனது புஜங்களிலோ, முன்னங்கைகளின் உரத்திலோ இல்லை; இந்த கண்களில் தான் இருக்கிறது என நினைக்கத் தோன்றிற்று.
கம்பீரமான விழிகள் அவை. ஆழ்ந்த நிதானம்; அச்சமறியாத அலட்சியம்; பலஹீனங்களுக்கு இரங்கும் பரிவு: பற்றற்ற தனிமை.
அவன் மனம் விசாலமானது; தண்டிக்கக் கூடியது; மன்னிக்கக் கூடியது; பற்றற்றது என்று பளிச்சென்று புலப்படுத்திய பார்வை அது.
சங்கிலி பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பினான், ஒரு வினாடி நேரம் மழையை உற்று நோக்கிவிட்டு பக்கத்திலிருந்த போலீஸ்காரரைப் பார்த்து “கொஞ்சம் லெட்ரினுக்குப் போகணும்” என்றான்; அந்தக் குரல் தொய்வின்றி கணீரென்று ஒலித்தது.
பீடியை உறிஞ்சி புகையை வாய் நிறைய ஊதிய அந்த கான்ஸ்டபிள் “நீ வேறயா?” என்று மரியாதையோடு சலித்துக்கொண்டார்.
“ஊம்… ஊம்…நட” என்று மறுக்கமுடியாமல் எழுந்தார்.
முண்டியடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் ஆஜானுபாகுவாக, ஒரு ஹொ்குலியத் தனித்துவத்தோடு சங்கிலி கான்ஸ்டபிளைப் பின் தொடா்ந்தான்.
ஸ்டேஷன் வருகின்ற இடப்புறக்கதவருகில் கூட்டம் நெறிந்தது வலப்புறக் கதவருகில் காணப்பட்ட லாவெட்ரிக்குள் சங்கிலி நுழைந்தான்.
சற்று நேரத்தில் விட்டுவிட்டு எஞ்சின் விசில் ஊதிற்று சலிப்போடு பீடியை உறிஞ்சிக் கொண்டே திரும்பிய கான்ஸ்டபிளுக்கு கையில் ஒரு பையோடு இறங்கத் தயாராக நிற்கும் ஓா் அப்பாவிக்கிழவி தென்பட்டாள்.
“ஏய் பையிலே என்ன?”
“ஒண்ணுமில்லீங்க சட்டி முட்டிதானுங்க” கிழவியின் குரல் நடுங்கிற்று.
“சட்டியா?” பையைத் தொட்டார் நெறு நெறுவென்று நெறிந்தது அரிசி.
“ஏய் கெய்வி. யாருக் கடுக்கா கொடுக்கிறே இது தான் சட்டியா?”
“டிக்கெட் வாங்கியிருக்காளா கேணங்க சார்” என்று ஒரு ஆலோசனை வெளிவந்தது.
“டிக்கெட் இருக்கா?”
கான்ஸ்டபிள் குரல் உயா்ந்தது. கிழவி உளறத் தொடங்கி விட்டாள்.
“எசமான், ஏளெப்பரதேசிங்க, மருமவ குளியாதிருக்கா. கஞ்சி காச்ச ஊரிலிருந்து எடுத்தாரன், டிக்கிட்டு வச்சிருக்கேணுங்க”
அந்த விசாரணை மும்முரத்தில் சங்கிலி லாவெட்ரிக் கதவைத் திறந்து கொண்டு வெளி வந்ததைக் கான்ஸ்டபிள் கவனிக்கவில்லை.
அவன் ஒரு நிமிஷம் நின்றதைக் கவனிக்கவில்லை; லாவெட்ரி ஓரத்துக் கதவை தனது விலங்கிட்ட கரங்களால் திறந்த வரையில் கவனிக்கவில்லை.
திடீரென்று சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. மழைத் துளிகள் பறந்துவந்தன. உள்ளுணா்வு எச்சரித்தது. கான்ஸ்டபிள் திரும்பிப் பார்த்தார். பெட்டிக் கதவும் லாவெட்ரிக் கதவும் ஒரேயடியாகத் திறந்திருந்தன.
கான்ஸ்டபிள் சட்டென்று “யோவ் எழுநூத்தஞ்சு” என்று அந்தப் பெட்டியே அதிர்வதுபோல் கூச்சலிட்டுக் கொண்டு வேகமாக ரயில் பெட்டியிலிருந்து குதித்தார்.
சங்கிலி சற்றுத் தொலைவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். கை விலங்கோடு அந்த வேகம் அசாத்தியம்தான்.
“டேய், டேய்…நில்லு…நில்லு” என்று மழையில் தண்டவாளங்களும் லைன் கம்பிகளும் இடற தடுமாறிக் கொண்டே ஓடினார் கான்ஸ்டபிள்.
அதற்குள் பெட்டியினுள் பரவிய கலவரத்தில் எழுப்பப்பட்ட 705, மூலையில் சாத்தி வைத்திருந்த ரைபிளைத் தூக்கிக் கொண்டு கீழே குதித்தார்.
சங்கிலி ரயில் தொடரோடு ஓடாமல் தண்டவாங்களைக் குறுக்கே தாவித் தாவிக் கடந்து கிழக்கே ஈட்டி வரிசைபோல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்புக் கிராதியை நோக்கி ஓடினான்.
மழை இடைவிடாது ஜலதாரையாகப் பொழிந்து கொண்டிருந்தது. பளீரென்று சர்ச் லைட் வெளிச்சம் கூட அந்த மழைத் தரையில் சற்று மங்கித் தெரிந்தது.
தனது சகாவை 705 வேகமாக ஓடி நெருங்கியபோது சங்கிலி மழை பெய்வதால் வழுக்கும் இரும்புக் கிராதியின் மீது மிகுந்த சாமர்த்தியத்தோடு ஏறும் முயற்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தான், சட்டென்று தாவி ஏறி, இரண்டு ஈட்டிகளில் இடைப்பட்ட இடைவெளியில் ஒரு காலையும், அந்த கிராதி வரிசையின் விளிம்புச் சட்டத்தில் ஒரு காலையும் வைத்து, தனது விலங்கிட்டக் கரங்களால் விழுந்துவிடாமலிருக்க ஒரு ஈட்டியைப் பற்றிக்கொண்டே ஒருகணம் அவன் அந்த வரிசையின் மீது நின்றான்.
மழையும் சர்ச்லைட் வெளிச்சமும் கலந்த சூழ்நிலையில் சங்கிலியின் உருவம் அந்த இரும்புக் கிராதியின் மீது நிற்பது விசித்திரமாகத் தெரிந்தது.
705 லோட் செய்யப்பட்டிருந்த நமது ரைஃபிளின் ‘லாக்க’ரைத்தள்ளி, அவனது காலைக் குறிபார்த்து ‘டிரிக்கரை’ அழுத்தினார்.
அந்த குண்டு புறப்படுவதற்கு முன்பு சங்கிலி லாவகமாக கீழே குதித்து விட்டான். 705ன் தோட்டா அவனது தலைக்கு மேலே வெடித்துப் பறந்தது.
எதிரே வரைகோடு போல், மங்கிய மழையிருளில் ஏலகிரி தெரியும் திசையில் சங்கிலி ஓடினான்.
அது கோடியூருக்குப் போகும் பாதை. சங்கிலி தலைதெறிக்க வளைந்து ஓடினான்.
பின்னால் உறுமுகின்ற ரைபிளிடம் தப்பித்துக்கொண்டால், எதிரே சுதந்திரமான உலகம்! சிறிது நேரத்தில் மழைத் தாரையில்; அவன் உருவம் மங்கிவிட்டது.
சங்கிலி கையாண்ட அதே வழியைப் பின்பற்ற 705 எடுத்துக் கொண்ட முயற்சிகளை அவரது கனமான லாடமடித்த போலீஸ் பூட்ஸுகள் பரிகாசத்தோடு அவமதித்துவிட்டன.
இருவரும் சற்றுத் தொலைவில் தெரிந்த, மரப்பாலத்தை நோக்கி ஓடினார்கள். ரயில்வே ஊழியர்கள் ஏறுவதற்காக இணைக்கப்பட்டிருந்த படிக்கட்டில் அவசரமாகத் தாவி, சுற்றிக் கொண்டு, சங்கிலி போன சாலை முடிவுக்கு ஓடிவந்தார்கள்.
இடைவிடாது பெய்யும் மழை அவா்கள் தலையை நனைத்து முகத்தில் வழிந்தது. அடிக்கடி வீசும் சாரலில் கண் குருடாயிற்று. இருப்பினும் அவா்கள் வேகமாக ஓடி வந்தார்கள்.
சற்று நேரத்தில் போலீஸ் விசில் ஓசை மழையில் ஓய்ந்து அமைதியடைந்து விட்டிருந்த அந்த பகுதியில், பரவலாகக் கேட்கத் தொடங்கிற்று.
தெரு விளக்குகள் எரியும் அந்த கோடியூா்ச் சாலையில், சற்றுத் தொலைவிலேயே, போலீஸ் ஸ்டேஷன். வேகமாக ஓடிய கான்ஸ்டபிள்களில் ஒருவா், ஸ்டேஷனில் வெளியே சென்ட்ரி நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் குளறிக் குளறி விஷயத்தைத் தெரிவித்தார்.
அவா் உள்ளே சென்று இரண்டு கான்ஸ்டபிள்களை எழுப்பினார். நான்கு விசில்கள் அப்போது தேடத் தொடங்கின. திசைக்கொன்றாக அழுது அழுது கைவீசித் துழாவுவது போன்ற விசில்கள்.
இதற்குள் அந்த எக்ஸ்பிரஸ் தனது பிளாட்பாரம் காலியாகி விடவே, நீண்ட பெருமூச்சுடன் மெதுவாக நகரத் தொடங்கிற்று. அதன் நீராவிச் சீற்றம் காதைக் கிழித்துவிடுவதுபோல் கா்ணகடூரமாகக் கேட்கலாயிற்று.